முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?



என்னடா இது.. இவன் ஒரு அல்பமான மேட்டரோட இன்னைக்கு கெளம்பி இருக்கானேனு நீங்க முனுமுனுக்கறது காதுல விழுது. ஆன இது அவ்வளவு லேசான சமாசாரமில்லைங்க... கொஞ்சம் வெவரமா இருந்தா இத படிச்சி தப்பிச்சிக்கங்க.. இல்லையா, உங்க பாடு... கொசுவண்ணார் பாடு..

1. மொதல்ல ஒரு கொசு கடிக்க ஆரம்பிச்சதும் அதை அடிக்காம அப்படியே அமைதியா சிரிச்ச மொகத்தோட ஒக்கார்ந்திருங்க. என்னது? பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா?! Try பன்னுங்க சார்... நம்பநாள முடியாதது எதுவுமே இல்லை.(பொண்டாட்டி தூங்கும் போது..ஹிஹி..) கடிக்கற கொசு லைட்டா கொளம்பிபோயி வேற எடத்துல ஒக்கார்ந்து கடிக்க ஆரம்பிக்கும்.. அப்பவும் உடாம புன்(ண்)சிரிப்போட இருங்க.. இங்கதான் இருக்கு நம்ப ராஜரகசியம். கொசு ரொம்ப நெகிழ்ச்சி ஆகி மத்த கொசுங்க கிட்ட போய் வடிவேலு ஸ்டைல்ல "எவ்வளவு கடிச்சாலும் தாங்கறாண்டி.. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு.." சொல்லி ஓன்னு அழும்... கடிக்கறது எல்லாமே பொம்பள கொசுங்க சார்... அவிங்க அழுது முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும். இந்த சென்டிமென்டல் கேப்புல டபார்னு கவுந்துடுங்க...

2. சங்கீத பேமிலியா நீங்க? அப்போ இன்னொரு வழி இருக்கு... லைட்டையெல்லாம் அணைச்சுட்டு புள்ளகுட்டிங்களோட கமுக்கமா படுத்திருங்க.. மொதல்ல ஒரு கொசு "நொய்ங்ங்ங்..." னு ராகம் இழுத்துகிட்டே உள்ள வரும்... ஒடனே பாய்ஞ்சுபோய் லைட்ட போட்டு பொண்டாட்டி கைல மிருதங்கத்தையும் புள்ளைங்க கைல வயலினையும் ஜால்ராவையும் கொடுத்துட்டு நீங்க தம்புராவ தூக்கிக்கிட்டு படக்குனு ஒரு மைக்க(அதாங்க ஒலிபெருக்கி..) எடுத்து கொசு மூஞ்சிக்கு முன்னால நீட்டுங்க... திடீர்னு கெடச்ச லைம்லைட்டுல(அதான் லைட்ட போட்டீங்க இல்ல..?) கொசு அப்பிடியே கிர்ர்ராகி "ஈ" னு இளிக்கும்(அப்போ ஈ கொசு மாதிரி இளிக்குமானு கேக்காதிங்க..!). சும்மா டொய்ங்டொய்ங்... லொட்டுலொட்டு.. ரெண்டு தட்டு தட்டுங்க... அவ்வளவு தான். கவுந்துக்கலாம்.. சான்சு குடுத்த சபாகாரங்கள எந்த சங்கீத வித்வானாவது கடிச்சிருக்கானா என்ன?!

3. இது கிராபிக்ஸ், மார்பிங்னு கொஞ்சம் டெக்னிகல் வழி... ஒரே ஒரு கொசுவ எப்படியாவது பச்சக்குனு செவத்தோட அடிச்சி அத டைட்குளாசப்ல ஒரு போட்டோ புடிச்சிக்கங்க... உங்க தாத்தா, கொள்ளு தாத்தா, அதுக்கு முன்னாடி தாத்தானு ஒரு ஏழு பேர செட்டப் செஞ்சி அவங்க எல்லாம் செத்துப்போன கொசுமேல கம்பீரமா கைய வச்சுகிட்டு இருக்கற மாதிரி போட்டோ எடுத்து அதை முன்னாடி எடுத்த கொசு போட்டோவோட மார்பிங் செஞ்சி 5x5 ல ப்ரிண்டு போட்டு பெட்ரூம் புல்லா மாட்டிவிடுங்க... நம்ப வீரசரித்திரத்த பார்த்து கொசுங்க அப்படியே பயந்துபோயி பேக்கடிச்சுடும். ஏழு தலைமுறையா பழனில சொப்பனஸ்கலிதத்துக்கு வைத்தியம் இருக்குனு நாம நம்பறபோது, கொசு நம்ப பரம்பரை ஏழு தலைமுறையா அதுக்கு எதிரின்னு நம்பாதா என்ன?

4. சில கொசுங்க புத்தக அலமாரிலயே ஒளிஞ்சிகிட்டு இருக்கும். இதுங்கெல்லாம் இலக்கியவாதி கொசுங்கன்னு இதுல இருந்தே கண்டுபுடிச்சிடலாம். இந்த கொசு கெளம்பி கடிக்க வரும்போது கவனமா ஒரு குண்டு புக்கா எடுத்து கைல வச்சிகிட்டு படிக்கர மாதிரி பாவ்லா பண்ணுங்க... கொசு கடிக்க ஒக்கார்ந்த உடனே அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் கருத்துக்கள பரிமாறிக்கறதுக்கு டைம் கேளுங்க... இலக்கியவாதி கொசுங்கறதால கண்டிப்பா இதுக்குன்னா உடனே ஒத்துக்கும். அப்பறம் எடுத்து விடுங்க சரக்க... சாரு ஆபிதீனை திருடியதையும், கருணாநிதிக்கு இலக்கியம் தெரியாதுன்றதயும், சுந்தரராமசாமி ஒரு அரைவேக்காடுங்கறதையும், ஜெயமோகன் ஒரு எழுத்துமெசினுங்கறதையும், மனுஸ்யபுத்திரன் ஒரு புத்தகவியாபாரிங்கறதையும், புதுமைபித்தன் ஜாதியத்த மீறி ஒன்னும் எழுதலைங்கறதையும், பொம்பள கவிஞருங்க ஏன் பச்சயா எழுதகூடாதுங்கறதயும், கெட்டவார்த்தை இல்லைனா அது இலக்கியமே இல்லைங்கறதையும் கலந்து கட்டி எடுத்துவுட்டம்னா, கொசு இப்பெல்லாம் இதுதான் இலக்கியமான்னு வெறுத்துப்போயி எங்கயாவது தூக்குல தொங்கிரும்... நாமளும் அடுத்து யார நோண்டலாங்கர நெனப்புலயே சொகமா தூங்கிறலாம்...

இவனுக்கு என்ன ஆச்சுங்கறிங்கலா? மேட்டு, லிக்விடுன்னு எதுக்குமே மடங்காத கொசுக்களோட இம்சை தாங்க முடியாம நடுராத்திரில எழுந்திரிச்சு உக்கார்ந்தா சிந்தனை இப்படிதான் போகுது... கொஞ்சம் பொறுத்துக்கங்க.. காலைல சரியாயிரும்ம்ம்...

கருத்துகள்

  1. கட்டுரை மிக அருமையாக வந்திருக்கிறது.
    கொசு அப்படி கடிச்சும் உங்க அருமை
    மனைவி தூங்கியிருக்காங்க போலிருக்கே?!
    :-) ரொம்ப சுதந்தரமா வார்த்தைகள் வந்து
    விழுந்திருக்கே!

    பாராட்டுகள்.

    அப்புறம், இந்த மூட்டைப் பூச்சி கடி இன்னும் சூப்பரா இருக்கும். ராத்திரி எல்லாம் முழிச்சி நான் எழுதி அனுப்பின கதை பரிசு கூட வாங்கியிருக்கு!

    மூட்டைப் பூச்சிகளை எல்லாம் ஒரு நாள் கொன்று போட்டோம். அப்போதிருந்து நான் கதைகள் எழுதுவதில் ஒரு தேக்கம் வந்திருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். :-)

    அன்புடன்,
    'சுபமூகா'

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி... பொதுவா கொசுங்க கடிக்கறதுல ஆம்பளைங்களுக்கே முன்னுரிமை கொடுக்குதுங்க... அதுனால தான் என் மனைவி தூங்கிட்டாங்கன்னு நெனைக்கறேன்.. இல்லைனா அவங்க என் துன்பத்துல பங்கெடுத்துக்காமயா இருப்பாங்க...? :)

    உங்க கதையோட url இருந்தா குடுங்க... அத படிச்சி உங்க சோகத்தையும் பகிர்ந்துக்கறேன்....

    பதிலளிநீக்கு
  3. யப்பா, சிர்ச்சி சிர்ச்சி வகுரு புன்னாகிப் போச்சி!!

    பதிலளிநீக்கு
  4. யப்பா, சிர்ச்சி சிர்ச்சி வகுரு புன்னாகிப் போச்சி!!

    பதிலளிநீக்கு
  5. அய்யா இளவஞ்சி, இப்போ தான் படிச்சேன். விழுந்து விழுந்து சிரிக்கிறேன். எல்லாரும் ஒரு மாதிரியா பக்குறாங்க. நகைச்சுவை உங்க பதிவில் வெகு இயல்பாக ஓடுகிறது. எதை எழுதினாலும் இந்த நகைச்சுவை உணர்ச்சியை இழந்துவிடாதீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  7. வாங்க அப்பூ வாங்க. இம்புட்டு நாளு எங்க போயிருந்தீங்க?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...