”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு? நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா? நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல? ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…” ஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது. நாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாச...
www.ilavanji.com