முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்



இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு.


கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு.


என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அமைதியாக பங்கேற்றது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஊர்நிறைய தன்னிச்சையாய் வைத்த தட்டிகள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள். கட்சிக்காரர்கள் வைத்ததுபோக பள்ளிகள் கல்லூரிகள் ரோட்டரிகள் மற்றும் சின்னச்சின்ன பழக்கடை முடிதிருத்தகம் உட்பட. அவர்கள் எல்லாம் இந்த விளம்பர உத்தியில் எத்தனை ஆட்களைபிடித்து வியாபாரம் பெருக்குவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.


எளிய கிராமத்து மாணவர்கள்தான். நேற்றுவரையும் நாளையிலிருந்தும் மீண்டும் தல தளபதி ரசிகர்மன்ற குஞ்சுகளாக ஆகிவிடுபவர்கள்தான். இருபக்கமும் தன்னிச்சையாக ஒருமித்து நின்றவர்களும் அதே இலவசத்தில் அடித்துவீழ்த்திய சோற்றாலடித்த பிண்டங்கள்தான். நாளைமுதல் ஏன் இன்றைக்கே டாஸ்மாக்கில் கவிழப்போகிறவர்கள்தான்.இவர்கள் அத்துணைபேரையும் தான் இத்தனைநாள் இந்த அப்துல்கலாம் வான்வெளி விஞ்ஞானி என ஏமாற்றியிருக்கிறார். பலவருடமாக அணுசக்தி நிபுணராக நடித்திருக்கிறார். இந்தியாவை வல்லரசாக்கும் சிந்தனையாளர் என புளுகியிருக்கிறார். எந்தவித உயரிய சிந்தனைக்கூறுகளும் இல்லாமல் ச்சும்மா கனவுகாணுங்கள் என்று எளிய அருள்வாக்கு சொல்லும் காலிப்பெருங்காய டப்பாவாக வாழ்ந்திருக்கிறார். தமிழருக்கு எந்தவித நலனும் செய்யாத கள்ள ஊமையாக வாழ்நாளெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார். நாடுமுழுவதும் உள்ள உயர்தர காண்வெண்ட் பள்ளிகளுக்கும் மேன்மக்கள் கல்லூரிகளுக்கும் மட்டும் தேடித்தேடி அவராகவே சென்று எதையாச்சும் அர்த்தமில்லாமல் பேசி ரிடையரானபின்பும் பணவெறியில் சம்பாதித்து இருக்கிறார். குண்டுவைக்கும் இஸ்லாமியர்களை அவர்கள் தீவிரவாதிகள் மட்டுமே என அழுத்திச்சொல்லும் ஒரு சில இஸ்லாமியர்கள் திடீரென இறந்த இந்தியர் கலாம் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடிக்கும்படி தந்திரமாக நடந்துகொண்டிருக்கிறார். மொத்தத்தில் வாழ்நாளெல்லாம் எவ்வளவு கடின மனதுடன் அளவிளா திறமையுடன் அவர் நடித்திருந்தால் இத்தனை எளிய மக்களை அவர் வாழ்நாள் முழுதும் ஏமாற்றியிருக்கவேண்டும். நல்லவேளை! இன்றைக்கு இந்த நடிப்பையெல்லாம் அவர் இறந்த வேளையில் மிகச்சரியாக கண்டறிந்துசொன்ன நம் அறிவுசார் ஜேம்ஸ்பாண்டுகள் மட்டும் இல்லையெனில் நாமெல்லாம் கலாமின் அற்புத நடிப்பில் இன்னமும் ஏமாந்து வாழ்விழந்து ஊக்கம் சிதைந்து மொத்தமாய் சீரழிந்துபோயிருப்போம்!


அமைதியான பேரணிமுடிவில் இப்பவெல்லாம் எந்த தலைவருக்கும் இதுமாதிரி மக்களே இறங்கி செய்யமாட்டாங்க என்றேன். ஒரு பெருசு பதினைஞ்சுவருடம் முன்ன இதேபோல் நடந்திருக்கிறது என்றார். மருத்துவம் பார்க்க ரெண்டுரூபாயும் மூனுநாள்வைச்சு பிரசவம் பார்க்க பதிநாலு ரூவாயும் கட்டணமாக பெற்ற லட்சுமிநாராயணன் என்றொரு தேர்ந்த நடிகர் மருத்துவராக செம்மையாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அவர் மறைவுக்கு பாவம் இந்த மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார ஏமாளிமக்கள் முழுவதும் அவர்களாகவே ஒரு நாள் கடையடைத்து மவுன ஊர்வலம் சென்று அவருக்கு சிலையும் வைத்துவிட்டார்கள் என்றார்.




இன்றைக்கு இறப்பை இத்தனை ஆராய்ச்சி செய்யும் அறிவுசார் சுடர்களே, கடனேன்னு இரங்கல்செய்தி கொடுக்கும் மக்கள் தலைவர்களே, நீங்களும் உங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உண்மைகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் இதே எளிய பொதுப்புத்தி மக்களிடம் தானே சேர்ப்பிக்க ஏற்றுக்கொள்ளவைக்க உணரச்செய்ய போராடுகிறீர்கள்? இந்த ஏமாளிமக்கள் இந்த சின்ன உணர்வுப்பிரட்டலில்தானே ஒருபக்கமாய் மாக்கள்போல சாய்கிறார்கள். இந்த சாய்வுதானே தேர்தலில் ஓட்டுகளாக மாறுகிறது? வாக்களிப்புமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள் மட்டுமே அரசியல் அதிகாரம் பெறும் வழிமுறை கொண்ட நம் நாட்டில் மக்களை உங்களுக்கும் இப்படி உணர்வுபூர்வமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் உங்களுக்கு உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது? நீங்களெல்லாம் ஏன் கலாமின் ஏமாற்று நடிப்பை காப்பியடித்து அவர் இப்பொழுது பெற்றிருக்கும் பலனை பெறக்கூடாது? இதுவரை உங்களுக்கு கிடைக்கப்பெறாத எளிய ஏமாளிமக்களின் ஆதரவை மொத்தமாய் அள்ளிக்கொள்ள கலாம் இதுவரை செய்த ஏமாத்து சித்துவிளையாட்டு நடிப்பை கொஞ்சநாளைக்கு செய்துபார்க்கக்கூடாது? வாழ்நாளெல்லாம் அந்த ராமேஸ்வரத்து கிராமத்தானால் விஞ்ஞானியாக ஜனாதிபதியாக கல்வியாளராக மாணவர்களை விரும்பும் நேயராக வெற்றிகரமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் பலதளங்களில் அறிவுகொண்ட பல அரசியல்களம் கண்ட உங்களால் ஏன் இதேபோல் நடித்து நீங்கள் விரும்புவனவற்றை அடைய முடியாது? நாம்தான் இறப்பிலும் கூட ஆதாயம் தேடும் மேன்மக்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அந்த ஆளின் நடிப்பு இவ்வளவு பெரிய ஆதாயத்தை தருமெனில் ஏன் பாய்ந்து அந்த வித்தையை நீங்கள் கைப்பற்றக்கூடாது?


தமிழகம் மட்டுமல்ல... அறிவுசார் மேன்மக்களின் பார்வையில் தெரியும் பொதுப்புத்தி மக்களெல்லாம் வெள்ளிப்பாத்திரம் போன்றவர்கள். தினப்படி சூழலும் கிடைக்கும் வழிகாட்டிகளும் தலைவர்களும் ஊடகங்களும் அவர்கள்மீது கருமையை படரவிடுகின்றன. கார்கில் பூகம்பம் நிலநடுக்கம் மற்றும் கலாம் போன்றவர்கள் மறைவு விபூதிபோட்டு தேய்ச்சாப்படி வெள்ளிப்பாத்திரங்களை பளிச்சுன்னு ஆக்கிருது. அதுவும் கொஞ்சகாலத்துக்குதானே நிற்கும்? அப்பறம் அதே மாசுபட்ட வியாபார ஊடக அரசியல் சூழலில்தானே வாழ்கிறோம். 


நல்லதோ கெட்டதோ நம்மை கிளப்பிவிட அடுத்த விபூதிப்பூச்சுக்கு காத்திருக்கவேண்டியதுதான்.


அந்த விபூதிப்பூச்சு வித்தையையாவது இந்த வாய்ப்பில் கற்றுக்கொண்டு அடிக்கடி செயல்படுத்தி பொதுமக்களை வளைத்தெடுத்து உடனடி பலன்பெறுங்கள், இன்றைக்கு கலாம் பலதுறைகளில் ஒரு தேர்ந்த நடிகர் என கண்டறிந்து எங்களுக்கு அறிவித்த அறிவுசார் கண்திறப்பாளர்களே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு