முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் பயணங்களில் இரயில்...

http://www.forartist.com/digitalart/tain.jpg

பரதேசம் பலகண்ட
பழுத்த பெருசொன்று
பெருமூச்சுடன் பல்குத்துகிறது
பிளாட்பாரத்தில்
நீண்டு கிடக்குது இரயில்
தண்டவாளத்தில்

தலைவரை ஏற்றிவிட
தோரணங்களுடன் தொண்டர்கள்
ஓடும் இரயிலுக்கு
டாட்டா காட்டும் சிறார்கள்

ஊரின் பிரிவுத்துயர்
பெயர்ப்பட்டியலில் தொலைகிறது
இருபத்தியாருக்குள் நாலைந்து 'F'கள்
குப்பைத்தொட்டிக்குள் வாலருந்த நாயொன்று

அப்பர்பர்த்தில் ஏறும்
அம்சமான பெண்ணொருத்தி
மனசின் நிராசைகள்
கண்களின் தெறிப்பில்
ஆற்றினில் அகப்பட்ட நிலா

கச்சாயம் கடிக்கும் பசங்களுடன்
எதிரே கட்டுச்சோறு குடும்பி
விரும்பிய பஜ்ஜியை
வாங்க மறுக்கும் மனசு
அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய்

விதவைக்கோட்டாவில்
வெள்ளுடை கேட்கீப்பர்
வண்ணக் கொடிகளோடு
பச்சைக் கொடியசைப்புக்கு
இரயில் மட்டும் போகிறது

உபயோகமாய்த்தான் இருக்கிறது
வீச்சமடிக்கும் கழிவறை
மலஜலம் கழிக்கவும்
மனவிகாரம் கிறுக்கவும்
கடந்து வந்த ஊர்களின்
கலாச்சாரப் பதிவுகள்

கொடுத்த காசுக்கு எனக்காக
பின்னோக்கி ஓடுது மரங்கள்
கூடவே வருகுது நிலா
என் பயணம் புரியவில்லை

நகரத்திலிருந்து நகரத்திற்கு
விரைகிறது என் வண்டி
இடைப்பட்ட தூரங்களில்
வாழ்க்கை இருக்குமென
மருகும் என் மனதுடன்

கருத்துகள்

  1. //நகரத்திலிருந்து நகரத்திற்கு
    விரைகிறது என் வண்டி
    இடைப்பட்ட தூரங்களில்
    வாழ்க்கை இருக்குமென
    மருகும் என் மனதுடன்//

    சற்றே கனமான கவிதை
    ஆழமான உணர்வுகளின் கோர்வையான பிரதிபலிப்பு

    நல்ல எழுத்தாற்றல்! வளர்க!!

    பதிலளிநீக்கு
  2. //ஊரின் பிரிவுத்துயர்
    பெயர்ப்பட்டியலில் தொலைகிறது//
    இருபத்தியாருக்குள் நாலைந்து 'F'கள்

    நன்றாக சொல்லியுள்ளீர்கள். வேகமாக அடுத்தடுத்த காட்சிக்கு போகாமல் எழுத முயலுங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. விதவைக்கோட்டாவில்
    வெள்ளுடை கேட்கீப்பர்
    வண்ணக் கொடிகளோடு

    ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. //**கொடுத்த காசுக்கு எனக்காக
    பின்னோக்கி ஓடுது மரங்கள்
    கூடவே வருகுது நிலா **// ithu enakku pudichirukku :-)

    பதிலளிநீக்கு
  5. //ஆற்றினில் அகப்பட்ட நிலா//

    இது அருமையான உவமை. ஜென் கதைகளில் 'No water, no moon' என்ற வார்த்தைகள் மனதை அப்படியே உருவகிப்பன. உங்கள் வார்த்தைகளை அப்படிச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  6. ஞான்ஸ், இப்படி நல்ல நல்ல கமெண்ட்டா நீங்க வீட்டா அப்பறம் நான் எப்படி உங்க பதிவுகள்ள லொல்லு கமெண்ட்டு விடறது? :)

    கார்த்திக்... பிரிவுத்துயர் தொலைந்தது நாலைந்து 'F'கள் கண்டபிறகுதான்! :) anyway நீங்கள் சொல்வதை புரிந்துகொண்டு முயல்கிறேன்..

    கீதா, சிவா, தங்கமணி நன்றி..

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கார்த்திக்ராம்ஸ்.. நீங்கள் சொல்லவருவது என்னவென்று இப்பொழுது புரிகிறது என நினைக்கிறேன்!!

    ஒரு காட்சியை சொல்லிவிட்டு அதற்கு உவமையாக பார்த்த மற்றொரு காட்சியையே சொல்லியிருக்கிறேன். இப்பொழுது படித்துப்பாருங்கள். சரியாக வருகிறதா என்று...

    பதிலளிநீக்கு
  8. //அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய்

    உபயோகமாய்த்தான் இருக்கிறது
    வீச்சமடிக்கும் கழிவரை
    மலஜலம் கழிக்கவும்
    மனவிகாரம் கிறுக்கவும்
    கடந்து வந்த ஊர்களின்
    கலாச்சாரப் பதிவுகள்

    கொடுத்த காசுக்கு எனக்காக
    பின்னோக்கி ஓடுது மரங்கள்
    கூடவே வருகுது நிலா
    என் பயணம் புரியவில்லை

    நகரத்திலிருந்து நகரத்திற்கு
    விரைகிறது என் வண்டி
    இடைப்பட்ட தூரங்களில்
    வாழ்க்கை இருக்குமென
    மருகும் என் மனதுடன்//

    மேலே உள்ளது நான் ரசித்த வரிகள். உருப்படியான கவிதை..தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி ரவிசங்கர்...

    பதிலளிநீக்கு
  10. அருமையாக இருக்கிறது இளவஞ்சி. இப்படியெல்லாம் எழுதுவீங்கன்னு தெரியாமப் போச்சுதே! என்னுடைய பாராட்டுகள்.

    // கச்சாயம் கடிக்கும் பசங்களுடன் //

    கச்சாயமெல்லாம் இப்பக் கெடைக்குதுங்களா? கரூர்ப் பக்கந்தான் இந்தக் கச்சாயம் கெடைக்கும். சின்னப்புள்ளைல நாங்கள்ளாம் அதிரசம் தின்னா...கரூர்ல பக்கத்து வீட்டுல கச்சாயம் திம்பாங்க. அதே மாதிரி தேங்கா சுடுறதும் கரூர்ப்பக்கத்துலதான் பாத்திருக்கேன். நீங்க கரூருங்களா?

    கரூரு மார்க்கட்டுல காய்கறி வாங்குறப்போ பட்டர் பீன்ஸ் கேட்டா நீங்க மதுரக் காரங்களான்னு கேப்பாங்க.

    பதிலளிநீக்கு
  11. ராகவன், நமக்கு தருமபுரி பக்கம்... வீட்டுலதான் கரூர்! :) ஆனா எங்க ஊருலையும் கச்சாயம்னுதான் சொல்லுவோம்! ஆமா.. நீங்க எங்க கரூருக்கு போனிங்க?!

    ப்ரேமலதா... நன்றி! அடிக்கடி வாங்க! :)

    பதிலளிநீக்கு
  12. எனக்குக்கூடப் புரியற மாதிரி நல்ல கவிதை இளவஞ்சி. எங்கூரிலும் கச்சாயம் உண்டு. இன்னும் கிராமப்புற டீக்கடைகளில் கிடைக்கிறது (பப்ஸ், கேக் இல்லாத இடங்களில்) அதிரசமும் உண்டு:-)

    பதிலளிநீக்கு
  13. // ராகவன், நமக்கு தருமபுரி பக்கம்... வீட்டுலதான் கரூர்! :) ஆனா எங்க ஊருலையும் கச்சாயம்னுதான் சொல்லுவோம்! ஆமா.. நீங்க எங்க கரூருக்கு போனிங்க?! //

    அங்க ஒரு மூனு வருசம் இருந்து படிச்சேன்ல.

    பதிலளிநீக்கு
  14. இளவஞ்சி, நன்றாக இருக்கிறது கவிதை. இப்பத்தான் இண்டர்சிட்டியிலோ, லோகமான்யாவிலோ போன பயணத்தைக் கண் முன் பார்ப்பது போல் இருக்கிறது.

    எங்க ஊர்லயும் கச்சாயம் தான். எனக்கும் ரொம்பப் பிடிக்கும் !:-)

    பதிலளிநீக்கு
  15. சூப்பர்

    //உபயோகமாய்த்தான் இருக்கிறது
    வீச்சமடிக்கும் கழிவரை
    மலஜலம் கழிக்கவும்
    மனவிகாரம் கிறுக்கவும்
    கடந்து வந்த ஊர்களின்
    கலாச்சாரப் பதிவுகள்//

    அண்மையில் இரயில் பயணம் மறக்க முடியாதது. அந்த அனுபவம் எழுத தூண்டி விட்டு விட்டீர்கள்.

    அப்புறம் கச்சாயமுன்னா என்னங்க?

    பதிலளிநீக்கு
  16. இளவஞ்சி,
    அற்புதமான ஒரு கவிதைக்கு நன்றியும், பாராட்டுக்களும்
    என்றென்றும் அன்புடன்
    பாலா

    பதிலளிநீக்கு
  17. ///இடைப்பட்ட தூரங்களில்
    வாழ்க்கை இருக்குமென
    மருகும் என் மனதுடன்///

    இது நன்றாக உள்ளது இளவஞ்சி

    என்னோட இரயில் கவிதையை
    நினைவுபடுத்தியிருக்கீங்க
    எடுத்து போடறேன்

    பதிலளிநீக்கு
  18. //ஞான்ஸ், இப்படி நல்ல நல்ல கமெண்ட்டா நீங்க வீட்டா அப்பறம் நான் எப்படி உங்க பதிவுகள்ள லொல்லு கமெண்ட்டு விடறது? :)//

    நல்லா கமெண்டு மட்டுந்தாம்பா உடமுடியுது! ஒரு நல்ல்ல்ல பதிவு போடனும்னு try பண்றேன்.. ஹும், முடியல!

    கமெண்ட்ல லொள்ளு பண்ணலாம்! ஆனா, பதிவுல பண்ணினா.. பச்சை, பச்சை, பச்சை!!!
    ;-)

    பதிலளிநீக்கு
  19. கோவை, ஈரோடு, கரூர் மற்றும் தருமபுரி ஆகிய ஊர்கள் வழிமொழிவதால், கச்சாயம் 'கொங்கு நாட்டுப்' பண்டமோ என எண்ணத் தோன்றுகிறது. மற்ற ஊர்களில் வேறு பெயரிட்டு அழைக்கப்படக்கூடும்.

    இளவஞ்சி, உங்களுடைய பீளமேடு அனுபவங்களைப் பார்த்து, சொந்த ஊரு கோவையோன்னு நெனச்சேன். படிச்சது CIT-யா இல்ல PST Tech-லயா ?

    உங்கள் ரசிகன்.

    பதிலளிநீக்கு
  20. அடடா! கச்சாயத்திற்க்கு இவ்வளவு ரசிகர்களா?! :)

    காசியண்ணே, நானும் ஏதாவது கல்யாணம் காட்சிக்கு ஊருக்கு போகையில கச்சாயம் பார்க்கறதுதான் இப்பெல்லாம் :)

    விஜய் அண்ணாச்சி, பார்த்து பலநாளாச்சு... சென்னைல செட்டில்லாயாச்சா? கச்சாயம்னா அதிரசத்தோட கூட்டாளிங்க. நெல்லைல கிடைக்காதுன்னு நினைக்கறேன் :)

    மதுமிதா, உங்க இரயிலையும் பதியுங்க...

    அனானி, பூர்வீகம்னு பார்த்தா தருமபுரி... மத்தபடி 25 வருசமா கோவைதான்...//CIT-யா இல்ல PST Tech-லயா ?// ஹிஹி... நாம இதையெல்லாம் தாண்டி புனிதமான TCEங்க.. அப்பறம் CITலயயும் கொஞ்சநாளு இருந்தனுங்...

    காசி, பாலா, ராகவன், செல்வராஜ், மதுமிதா, ஞான்ஸ், பத்மா, வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  21. இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

    பொங்கல் வாழ்த்துகள்.
    நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

    அன்புடன்,
    கல்வெட்டு (எ) பலூன் மாமா

    பதிலளிநீக்கு
  22. //அதே மாதிரி தேங்கா சுடுறதும் கரூர்ப்பக்கத்துலதான் //

    ராகவன் எங்க ஊருலயும் ஆடி மாதம் முதல் தேதியன்று தேங்காய் சுடுவோம்.

    சிறு வயதில் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தேங்காய் சுடும் நோம்பியன்று ஒரு (ஈஸ்வரன்) கோவிலின் மூலையில் சருகுகளைப் போட்டு எரித்து ஊரில் உள்ள அனைவரும் அதில் தேங்காய் சுடுவோம்.

    பதிலளிநீக்கு
  23. // உபயோகமாய்த்தான் இருக்கிறது
    வீச்சமடிக்கும் கழிவறை
    மலஜலம் கழிக்கவும்
    மனவிகாரம் கிறுக்கவும்
    கடந்து வந்த ஊர்களின்
    கலாச்சாரப் பதிவுகள் //

    நல்ல பதிவுங்க....

    // கொடுத்த காசுக்கு எனக்காக
    பின்னோக்கி ஓடுது மரங்கள் //

    ஹை இதை என் பதிவில் கூட நான் வேறு விதமா சொல்லிட்டேன்.. ( ம்.!! நானும் இலவசமா ஒரு விளம்பரம் சேர்த்துட்டேன்னு நினைக்கிறேன்)

    // அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய் //

    எங்களுக்கு செய்யும் செலவையும் ஒரு ரயில் ப்ரயாணத்தின் முக்கிய அம்சமாக சேர்த்துள்ளீர்கள்.. எப்படி react செய்வதென்றே புரிய வில்லை..

    எனது திருநங்கைகள் குறித்த எனது Documentationல் இதும் முக்கிய கவிதையாக அமையும்..

    இதே கவிதையை பத்திரிக்கைகளுக்கும் இடலாம் தானே...

    வேறு எதும் எங்கள் விசயம் தொடர்பாக நீங்கள் எழுதியிருந்தாலோ.. உங்கள் பார்வையில் வந்திருந்தாலோ எனக்கு தெரியப்படுத்தவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  24. // அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய் //

    எங்களுக்கு செய்யும் செலவையும் ஒரு ரயில் ப்ரயாணத்தின் முக்கிய அம்சமாக சேர்த்துள்ளீர்கள்.. எப்படி react செய்வதென்றே புரிய வில்லை.. //

    வித்யா,

    கவிதைக்கு விளக்கம் சொன்னால் சுவை போய்விடும் என்பார்கள்! அதெல்லாம் பெரிய ஆளுங்களுக்கு! நாமெல்லாம் எழுதிப்பழகற ஆளுங்கறதால விளக்கம் சொல்லிக்கிட்டா தப்பில்லை! (அப்படியாவது புரிய வைச்சிடனுங்கறதுதான்! :))) )

    ஒரு காட்சியை சொல்லிவிட்டு அதற்கு உவமையாக பார்த்த மற்றொரு காட்சியையே சொல்லியிருக்கிறேன்.

    கட்டுச் சோற்றுடன் வந்திருக்கும் ஏழைக்குடும்பதின் சிறுவர்களின் முன் காசு கொடுத்து பஜ்ஜி வாங்கி அவர்கள் பார்க்க தின்ன கூச்சம்! வாங்கி அவர்களுக்கும் கொடுத்தால் தவறாகப்போய்விடுமோ என்ற தயக்கம்! அவர்கள் வறுமை மீதான என் பரிதாப உணர்ச்சியை அரவாணிகளுக்கு 5 ரூபாய் கொடுப்பதில் சமன்செய்து கொள்கிறேன்!

    என்ன செய்ய? இன்றுவரை நானெல்லாம் அரவாணிகளை வெறுக்காமல், அவர்கள் மீது பரிதாபப்படும் வரைக்கும்தான் பக்குவப்பட்டிருக்கிறேன்!

    அவர்களையும் நம்முள் ஒருவராக சகஜீவனாக மதிக்க இன்னும் நான் பக்குவப்பட, பயணப்படவேண்டும்! :(

    // எனது திருநங்கைகள் குறித்த எனது Documentationல் இதும் முக்கிய கவிதையாக அமையும்.. //

    தெரிவு செய்தமைக்கு நன்றி!

    இப்பதிவு உங்கள் வாழ்விப்பற்றி முழுதாய்ப் பேசாவிட்டாலும், உங்களவர்களுக்கு மிகப்பிடித்த ரயிலைப்பற்றி இருப்பதால்! :)

    பதிலளிநீக்கு
  25. நல்லா இருக்குங்க கவிதை. நம்மூரில் இரயில் பயணம் ஒவ்வொன்றும் ஏதாவது புதிய அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது.

    கச்சாயமும், அதிரசமும் ஒன்னேதான்னல்லவா நினைச்சுக்கிட்டிருக்கேன்! ;-)

    பதிலளிநீக்கு
  26. ஆகா, இளவஞ்சி, கவிதையெல்லாம் கூட இருக்குமா உங்க பக்கத்துல?!!.. தோண்டிப் பார்க்க வேண்டியது தான்..

    இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. உங்க வழக்கமான யதார்த்த பாணி..

    //கொடுத்த காசுக்கு எனக்காக
    பின்னோக்கி ஓடுது மரங்கள்
    கூடவே வருகுது நிலா
    என் பயணம் புரியவில்லை
    //
    எனக்கும் இது பிடிச்சிருந்தது..

    பதிலளிநீக்கு
  27. அன்பு நண்பரே கவிதையின் அத்தனை வரிகளும் அருமையாக ஆழமாக வந்திருக்கிறது. சில ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.
    முயற்சி செய்யுங்கள்

    வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. //மலஜலம் கழிக்கவும்
    மனவிகாரம் கிறுக்கவும்
    கடந்து வந்த ஊர்களின்
    கலாச்சாரப் பதிவுகள்
    //
    -- true!!

    பதிலளிநீக்கு
  29. //நகரத்திலிருந்து நகரத்திற்கு
    விரைகிறது என் வண்டி
    இடைப்பட்ட தூரங்களில்
    வாழ்க்கை இருக்குமென
    மருகும் என் மனதுடன்//
    நச்!!

    நல்ல கோர்வையான கவிதை...

    //நாம இதையெல்லாம் தாண்டி புனிதமான TCEங்க//

    ஆஹா..நம்ம ஆளா நீங்க??

    பதிலளிநீக்கு
  30. நல்ல முயற்சி. பொதுவாக் கவிதைகளிலே உரிச்சொற்கள் ( adjectives ) இல்லாமல் இருந்தால், நல்லா இருக்கும். இந்தக் கவிதையிலே. 'பழுத்த', 'அம்சமான', 'வீச்சமடிக்கும்' ஆகிய மூன்று வார்த்தைகளையும் எடுத்துட்டுப் படிச்சால், நல்லா இருக்கும் போல இருக்கு...

    கவிஞராயிட்டீங்க, ஏதோ நம்மளை எல்லாம் மறக்காம இருந்தா செரி... :-)

    பதிலளிநீக்கு
  31. இராதாகிருஷ்ணன்,

    // கச்சாயமும், அதிரசமும் ஒன்னேதான்னல்லவா நினைச்சுக்கிட்டிருக்கேன்! ;-) //

    ரெண்டும் வேற வேற அமிர்தங்கள்! :)

    ****
    பொன்ஸ்,

    // கவிதையெல்லாம் கூட இருக்குமா உங்க பக்கத்துல?!!.. // அத நீங்கதான் சொல்லனும்! :)

    ****
    மஞ்சூர் ராசா,

    நீங்க சொல்வது உண்மை! நல்ல தமிழ் வார்த்தைகளைப் போட்டு எழுதினாலும் இதே அழுத்தத்துடன் சொல்ல வந்த விடயம் வெளிப்படத் தேவையான சொல்வளம் வேண்டுமே! பயில்கிறேன்! :)

    ****
    கப்பி பய,

    // நம்ம ஆளா நீங்க?? // அதே! அதே!! இன்னும் ஷ்யாம், $செல்வன் இவங்களையும் சேர்த்துக்கங்க! :)

    ****
    பிரகாஷ்ஜீ,

    // உரிச்சொற்கள் ( adjectives ) இல்லாமல் இருந்தால் // கவனத்தில் கொள்கிறேன்!

    // கவிஞராயிட்டீங்க, // ஆசான் சாத்தான்குளம் வரும் சேதிகேட்டு தலைதெறிக்க ஓடுகிறார் இளவஞ்சி! :)))

    இது பழைய பதிவுங்ண்ணா!

    பதிலளிநீக்கு
  32. கவிதையினை தெளிவாகவும், அர்த்தத்துடனும், அழகு நடையுடன் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...